Saturday, October 23, 2010

கண்ணீர் பொம்மை ...





















உயிர்த் திரவம்
கண்ணீர் திவளைகளாய்
மாறி மண் சுடும்
நேரம் இது!
எங்கள் இழப்பு, வலி ,பசி
எல்லாம் மறந்து ,
இதோ! என் தமிழன்
இன்னொரு தீபாவளி
கொண்டாடத் தயாராகிவிட்டான் .
ஈழத்தில்,நாங்களோ!
நாங்கள் வாழ்ந்த தேசத்தில்
இழந்த உயிர்களை இன்னும்
எண்ணிக்கொண்டு...
அடுத்த முறை பிறக்குமா?
எனக்கு என் அதே குழந்தை!
இல்லையெனில்
நான் இழந்ததை திருப்பித்தா .அது போதும்.
தவமாய்த் தவமிருந்து
தவிப்பிலே யான் பெற்ற இன்பம்
நெருப்பிலே வெந்து போனது யார் குற்றம்?
போர் நிறுத்தப் பிறந்த புத்தன் என
நான் நினைத்துப் பெற்றது குற்றமா?
பூமி ஆளப் பிறந்து ,
வானம் பார்த்துக் கிடக்கும்
என் மன்னவன் குற்றமா?
இனியொரு முறை பூக்குமோ?
இன்னொருமுறை
உயிர்வலி கிடைக்குமோ? ஐயோ !
இனி என் கருப்பை,
கரியமிலக் காற்றடைத்த வெறும் பை!
தாயே! என் கருவறையில் தனி அறை
உண்டெனச் சொல்!
என் தமிழினத்தின் வாரிசை
நின்றெழச் செய்கிறேன்.

அன்று,
எனக்கும்,அவருக்குமான
எங்கள் தனிமையை
நிர்வாணமாக்கிய இரவுகளில்,
மூன்றாமவனால்
நிர்மூலமாக்கப் பட்ட
அந்த நிமிடங்களில்
நான் செத்துப் போனேன்.
இன்று மீண்டும் ஒரு முறை
என் மைந்தனை இழந்து...

பயம். இறைப்பெருந்தகை
எமக்களித்த தனிப்பெரும் வரம்.
எம் பிள்ளைகளின் வயிற்றுப் பசியும்
எங்கள் காயத்தின் வலியையும்
மறக்கச் செய்யும் மந்திரமாய்
அவன் தந்த அருமருந்து!
அதன் போதையில் தான்
அனேக நேரங்கள் நாங்கள்
உறங்கிப் போகிறோம்.

எம் பிள்ளைகள்
புத்தகம்,நீர்குப்பி விடுத்து
வீதி விளையாட்டை மறந்து
துப்பாக்கி தோட்டாக்களுக்கு
மத்தியில் துறவு மேற்கொண்ட
விதி விளையாட்டை என் செய்வேன்?
என் தாயே!
உன் சோலை தேசத்தின், பாலைநிலத்தில்
உறவுகளற்ற ஊர்குருவிகளாய் நாங்கள்!
எங்கள் ஈழத்து இழவு காக்கும்
கண்ணீர் பொம்மையாய் நீ.







1 comment:

  1. என் தமிழனையே கண்டுகொள்ளவில்லை ... இந்த எழுத்துக்களையா வாசிக்கப் போகிறீர்கள் ...

    ReplyDelete